உலக சந்தையில் வேகமாக உயரும் எரிபொருள் விலை! வெளியான விலை சூத்திரம்
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
எரிபொருள் விலை
அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், எரிபொருள் விலை என்பது விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டது.

எண்ணெய் விலை சூத்திரம் ஒன்றும் புதிதல்ல. எரிபொருளைக் கொண்டுவரும் செலவு மற்றும் அதற்கான ஏனைய செலவுகள் - இவற்றைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை.
100 ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், விலை சூத்திரத்தின்படி வரவேண்டிய விலையை விடக் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என அமைச்சர் கருதியிருக்கலாம். மாறாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின்படி குறைந்த விலைக்கு நிர்ணயித்து அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின்படி விலையைக் கணித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும். அதன் பின்னரே அரசாங்கம் முடிவெடுக்கும்.
விலை சூத்திரம்
விலை சூத்திரம் ஒரு மாதத்தின் சராசரியைக் கொண்டு அல்லாமல், மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டது. அது அந்த மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்புகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது.

இப்போதுள்ள சிக்கல்களினால், ஒரு மாதத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையின் சராசரியைக் கணக்கிடுவது சாத்தியமற்றது. இப்போது ஒரு மாதம் வரை காத்திருக்க முடியாது, ஏனெனில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக மாறுகிறது. சூத்திரம் அதேதான், ஆனால் சூத்திரத்தைக் கணிக்கும் காலப்பகுதி மட்டுமே மாறியுள்ளது.
முதல் தடவையாக முதலாம் திகதி விலை அதிகரிக்கப்பட்டது. அது வழமையான நடைமுறைப்படியே நடந்தது. அடுத்ததாக 9ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. போர் 28ஆம் திகதி தொடங்கியது. 28ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் இடையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார்.