சமூகப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பேன்: யாழ்.ஆதீனத்தின் புதிய பேராயர் (Photos)
இறை பணியாற்ற இறைவனால் அனுப்பப்பட்ட கருவிகளில் ஒருவனாக, சமயத்தையும் தாண்டி சமுதாயப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பேன் என தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தின் 5வது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் தெரிவித்துள்ளார்.
புதிய பேராயராகப் பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (3.01.2023) யாழ். வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒற்றுமையாக இறை பணி
இறை பணியாற்றுவதற்காக இறைவன் என்னை ஒரு கருவியாக அனுப்பியுள்ளார். என்னை இந்த பொறுப்புக்கு வருவதற்கு பிரார்த்தித்த அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.
எமது திருச்சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற வேண்டும்.
நாம் நொந்து போன மக்கள், எம்முள் உடைவுகள் இருக்கலாம் அவற்றையெல்லாம் மறந்து ஒற்றுமையாக தோளோடு தோள் நின்று இறை பணியாற்ற முன்வருவதோடு அதனையும் தாண்டி சமூகத்திற்காக என்னை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன் என மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பேராயர்கள், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நல்லை ஆதீனம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்
சிறீசற்குணராஜா, தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என
பலரும் கலந்துகொண்டனர்.



