இலங்கையில் நம்பிக்கை என்றால் என்ன! நம்பிக்கையின் விலை என்ன!
இலங்கையும் - நம்பிக்கையும் என்ற தலைப்பில் எழுதும் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் விடயங்கள் என்றே கூறவேண்டியுள்ளது.
இலங்கையின் சுதந்திரம் அடைந்ததில் இருந்து இலங்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.
அந்த தோல்விகளின் விளைவுகளே இன்று இலங்கையின் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகும்.
ஆரம்பத்தில் சுதந்திரம் பெற்ற இலங்கையில் சிங்களவர்களுடன் இணைந்து வாழலாம் என்ற தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை கொண்டனர்.
எனினும் அந்த நம்பிக்கையை சிங்கள அரசியல்வாதிகள் கிரமமாக முறியடித்து, இலங்கைக்குள் தமக்கும் தனியான நாடு மற்றும் தனியான அலகு வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி விட்டனர்.
இன்னும் அந்த நம்பிக்கை துரோகம் தொடர்கிறது. எனவே நம்பிக்கை என்ற பதத்தை பொறுத்தவரை இலங்கையின் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில், அது தகர்ந்துவிட்டது என்றே கூறலாம்.
அதனை அண்மைக்காலத்தில் கட்டியெழுப்பக்கூடிய எவ்வித ஏற்பாடுகளையும் காணமுடியாதுள்ளது.
மறுபுறத்தில் சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு இருந்த நம்பிக்கையும் காலத்துக்கு காலம் மோசமாகி தற்போது மோசமாகியே போயுள்ளது.
சிங்களவர்களுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நம்பிக்கையானது, அடுத்த இனங்களை அடக்கி ஒடுக்கியதன் மூலம் ஏற்பட்ட நம்பிக்கை என்று கொள்ளலாம்,
ஏனெனில் தமிழர்களும் முஸ்லிம்களும் இலங்கை தேசத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை காட்டியே சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்து வந்தனர்.
எனினும் இன்று இந்த நம்பிக்கை சிறிது சிறிதாக தேய்ந்து வருகிறது.. சிங்கள மக்களே சிங்கள அரசாங்கங்களுக்கு எதிராக பேசத்தொடங்கியுள்ளனர்.
இதற்கு காரணம் இனத்தை துாக்கிப்பிடித்து, இனவாதத்தையும் மதவாதத்தையும் துாண்டி, அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுவரை சிங்கள அரசியல்வாதிகள் செயற்பட்டு வந்துள்ளனர்.
இதில் எந்த அரசாங்கங்களையும் நியாயப்படுத்த முடியாது. எனவே அரசாங்கங்களின் இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகள் இன்று சிங்கள இனத்துக்கே பாதமாக அமைந்துள்ளதுடன் நாட்டுக்கும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சிங்கள் இளைஞர்கள் மத்தியில் தாம் சிங்கள அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டதன் காரணமாக தமிழ் உறவுகளை பகைத்துக்கொண்டோம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துள்ளது.
எனினும் அந்த உணர்வை மேலோங்கச்செய்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் முன்னெடுக்கப்படுமா? அல்லது தொடர்ந்தும் இனப்பகையை துாண்டி சிங்களமே ஸ்ரீலங்கா என்ற தான்தோன்றித்தனம் மேலோங்க செய்யப்படுமா? என்பதே கேள்வியாக அமைந்துள்ளது.
இந்தநிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை அரசாங்கங்கள் ஏற்படுத்தும் என்பதை யாரும் எதிர்பார்க்கமுடியாது. அதனை சமூக ஆர்வலர்களே ஏற்படுத்தவேண்டும்.