சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் பிரவேசித்த இலங்கையர் கைது
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை தமிழ்நாடு ராமேஸ்வரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் கைது
தமிழ்நாட்டில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியுள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றதாக குறித்த நபர் கூறினார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நபரும் குறித்த முகாமில் தங்கி இருந்தார் எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் சட்டரீதியான முறையில் இலங்கைக்கு திரும்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
ராமேஸ்வரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மண்டபம் அகதி முகாமிற்கு அருகாமையில் காணப்படும் பூங்கா ஒன்றில் இருந்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் அவரை எதிர்வரும் 21-ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.