இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்! சிறீதரன் எம்.பி கோரிக்கை
ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று (23.08.2026) யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி இடம்பெறும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறவழிப் போராட்டம்
இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை தொடர்ந்து அபகரித்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும் நோக்கில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது புலனாய்வுத் துறையினரும் இராணுவத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன், அவர்களைப் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் சுதந்திரமாக போராட முடியாதவாறு பந்தல் அமைக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 36 வருடங்களாக சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள்
போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இராணுவ முகாம்களுக்கு அருகில் சிங்களக் குடும்பங்கள் தொடர்ச்சியாக குடியேற்றப்பட்டு வருகின்றன.
இது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் முழுமையான முயற்சியாகும். இலங்கை அரசும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாக தெரிவித்தாலும், களத்தில் நிலைமை முற்றிலும் மாறாகவே உள்ளது.

எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்திடமிருந்து மீட்டுத் தருவதற்கு உடனடியாக தலையிட வேண்டும்.
தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிளான் மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மக்களின் இந்த நியாயமான போராட்டம் தொடரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச வீட்டு பொருட்களுடன் வீதியில் காத்திருந்த நிலை.! பின்னணியில் நடந்த இரகசிய பேச்சுவாரத்தை அம்பலம்