ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! நீதிமன்ற விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் ஒரு மருத்துவர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தூதரகம் உறுதி
ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது.

2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று உயிரிழந்திருந்தார்.
2021 ஆகஸ்ட் மாதம் வெளியான விசாரணை அறிக்கையில், தொடர்புடைய தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு இருப்பினும், விஷ்மா மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி 13 ஊழியர்கள் மீது வழக்கு பதிய சட்டத்தரணிகள் மறுத்துள்ளதாகவே கூறப்பட்டது.
ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு
இந்த நிலையில், விஷ்மாவின் சகோதரிகள் வயோமி மற்றும் பூர்ணிமா சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மாவுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாகவும் ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், விஷ்மாவின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் ஜப்பான் அரசுக்கு எதிராக தொடர்ந்த இழப்பீட்டு வழக்கு நாகோயா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சாட்சி அளித்த மருத்துவர் மசாமுனே ஷிமோ, விஷ்மாவின் உயிரை காப்பாற்ற மூன்று வெவ்வேறு கட்டங்களில் வாய்ப்பு இருந்ததாக கூறியுள்ளார்.

விஷ்மா கடுமையான நீரிழப்பு மற்றும் உணவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் ரத்த ஓட்டம் குறைந்து, வைட்டமின் B1 குறைபாடு ஏற்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக அவருக்கு “பெரிபெரி” எனப்படும் இதய நோய் ஏற்பட்டதாக கூறினார். பின்னர் அவர் அதிர்ச்சி நிலைக்குச் சென்று, பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்ததாக விளக்கியுள்ளார்.
உணவு மற்றும் செவிலியர் பதிவுகள், சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வந்ததாக ஷிமோ தெரிவித்தார்.

கடுமையான பட்டினி நிலை
விஷ்மா உயிரிழப்பதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு செய்யப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் கடுமையான பட்டினி நிலையை காட்டும் அசாதாரண மதிப்புகள் பதிவாகியிருந்ததாகவும், அந்நிலையில் வழக்கமாக இரத்த பரிசோதனை செய்து, உடனடியாக intravenous drip (IV) வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதுவே முதல் உயிர்காக்கும் வாய்ப்பாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், விஷ்மா உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், உயிரிழந்த நாளிலும் அவரது இரத்த அழுத்தம் அளவிட முடியாத நிலையில் இருந்ததாகவும், அசாதாரணமான ஆழமான மூச்சுத் திணறல் காணப்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
இந்த சாட்சியம், விஷ்மா சந்தமாலியின் மரணத்தில் குடிவரவு மையத்தின் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்ற கேள்வியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.