தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென அறிவித்த திறைசேரி செயலாளர்!
இன்று இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம், தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடி ஆராய்கிறது.
குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு திறைசேரியின் செயலாளர், அரச அச்சகர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழு
அடுத்த மாதம் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். திறைசேரிச் செயலர் மகிந்த சிறிவர்த்தன, தேர்தல்களை நடத்துவதற்கு போதிய நிதியை வழங்குவதாக உறுதியளித்தால், இன்று (07.03.2023) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தேர்தலுக்கான குறுகிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தயாராக இருக்கின்றது என தேர்தல் கால ஆணைக்குழுவின் தவிசாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.
அத்துடன், திறைசேரி உடனடியாக நிதியை விடுவிப்பதாக உறுதியளித்தால், தேர்தல் நடைபெறும் நாளைக் குறிக்கும் வர்த்தமானி அறிவிப்பு 25 மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மூலம் நாளை (08.03.2023) அல்லது நாளை மறுநாள் (09.03.2023) மேற்கொள்ளப்படும் எனவும் நிமால் புஞ்சிஹேவா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலே திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திறைசேரிச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடி தேர்தல் திகதியைத் தீர்மானிக்கத் தேவையில்லை என்ற எதிர்க்கட்சிகள் கடிதம் மூலம் கோரியிருந்த நிலையில் அதனைப் பொருட்படுத்தாது ஆணைக்குழு இன்று சந்திப்பில் ஈடுபடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
you my like this video