இலங்கை அரசின் கோரமுகம் வெளிப்பட்டுள்ளது! - சிறிதரன் கண்டனம்
"தமிழின விடுதலைக்காக, காந்திய வழியில் தன் உயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
இது இந்த அரசின் கோர முகத்தை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது."
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (S. Shritharan) இவ்வாறு தெரிவித்துள்ளார். கஜேந்திரன் எம்.பியின் கைது தொடர்பில் சிறிதரன் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
"சர்வதேச நியமங்களுக்கும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கும் அமைவாக, விதித்துரைக்கப்பட்ட சிறப்புரிமைகளுக்கு உரித்துடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தன் இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகச் செம்மல் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, ஆயுதமுனையில் அதியுச்ச வன்முறைப் பிரயோகங்களோடு கைதுசெய்யப்பட்டுள்ளமை இந்த அரசின் கோர முகத்தை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது, அவரது சிறப்புரிமைகளை மீறும் வகையில், இந்த ஜனநாயக நாட்டில் இத்தனை மோசமான அரச வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமையானது, இங்குள்ள சாதாரண தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதைத் தெட்டத்தெளிவாக எண்பித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை ஒரு குற்றவாளியைப்போல் வலுக்கட்டாயமாகப் பொலிஸார் கைதுசெய்தமைக்கு எனது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன்" - என்றுள்ளது.