கடும் சிக்கலில் அரச ஊழியர்கள்! 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள இலங்கையர்களின் வாழ்க்கைச் சுமை..
அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது என ஐ.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிக்கலில் மக்கள் மற்றும் அரச, தனியார் ஊழியர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம், திறைசேரியில் பணம் நிறைந்து வழிவதாக தெரிவித்தாலும், அவை அனைத்தும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய வரியின் ஊடாக ஈட்டப்பட்டதேயாகும். இதனால், மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.
அரச, தனியார் மற்றும் சிறு, நடுத்தர வியாபாரிகள் உள்ளிட்டோர் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சாதாரணமாக குடும்பத்தினைக் கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது.
பால்மா, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும் சாத்தியம் உள்ளது.
பாடசாலை உபகரணங்கள், குடிநீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் சரிவடைந்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில், எரிபொருளின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இலங்கையில் வெறும் 15 ரூபாவால் மாத்திரமே பெட்ரோலின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது.
ஏனைய, டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. மக்களுக்கான சலுகைக் கூட வழங்கப்படவில்லை.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை மிதக்க விட்டு, பொதுமக்கள் பேரழிவைச் சந்திக்க வழிவகை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.