இலங்கை அரசு வீணான வதந்திகளை பரப்புகின்றது: க.இன்பராசா
இலங்கை அரசு செய்யும் தவறுகளை மறைப்பதற்கு விடுதலை புலிகள் மீது பலி சுமத்தி வதந்திகளை கிளப்புவதாக தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.
ஜுலை 05 மற்றும் 06ம் திகதிகளில் விடுதலை புலிகள் அமைப்பினால் குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜுலை 05 கரும்புலிகள் தினம் அத்தினத்திலும், 06ம் திகதியும் விடுதலை புலிகள் குண்டு தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக வதந்தியை அரசாங்கம் பரப்பியுள்ளது.
வீண் வதந்தி
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்கள் மத்தியில் ஒரு பயத்தை உண்டாக்கும் நோக்கத்துடனேயே இலங்கை அரசாங்கம் கதையொன்றை கட்டவிழ்த்து உள்ளது.
விடுதலை புலிகளினால் குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்ற கருத்து முற்று முழுக்க பொய்யான கருத்து.
மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தினை ஏற்படுத்தி எமது மக்களை இன்னும் அதள பாதாளத்திற்கு கொண்டு செல்வதற்கு தமிழ் மக்கள் சார்பில் எவரும் இல்லையென்பதனை விடுதலை புலிகள் கட்சியினராகிய நாங்கள் தெரிவித்து கொள்கின்றோம்.
2009ம் ஆண்டு எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு முன்னாள் போராளிகளாகிய நாங்கள் ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றோம்.
இவ்வாறான நிலையில் விடுதலை புலிகள் மீள உருவாக போகின்றார்கள் என இலங்கை அரசு மாத்திரமல்லாது இந்திய அரசு கூட கடந்த சில மாதங்களின் முன்னர் கருத்து வெளியிட்டிருந்தது.
இதனை மறுத்தும் நாங்கள் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தோம். உண்மையிலேயே இலங்கை அரசும், இந்திய அரசும் விடுதலை புலிகளை வைத்து பந்தாடி கொண்டிருக்கின்றார்கள்.
விடுதலை புலிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வித அரசியற் செயற்பாடுகளையும் முன்நகர்த்த முடியாமல் இருக்கின்றார்கள்.
எனவே ஜீலை 05, 06ம் திகதிகளில் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவலுக்காக நாங்கள் எங்கள் கண்டனத்தை தெரிவிப்பதோடு, இலங்கை மக்கள் அனைவருக்கும் எமது கட்சியின் சார்பில் வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.
எக்காலத்திலும் விடுதலை புலிகள் ஆயுத ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்து கொள்கின்றோம்.
விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி தற்போது அரசுக்கெதிராக போராடும் மக்களை அச்சப்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறானதொரு செய்தியை இலங்கை அரசாங்கம் மக்கள் மத்தியில் வெளியிட்டிருக்கின்றது.
இன்று வடக்கு, கிழக்கிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் பன்னிரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கின்றார்கள்.
அவர்கள் எமது மக்களின் விடுதலைக்காக ஆயுத போராட்டத்தினை முன்னெடுத்து இன்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் இன்று தங்கள் குடும்பங்களையும், தங்களையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்று பாடுபட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் வதந்திகளை வெளியிட்டு அவர்களை அச்சப்படுத்தி மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளை கட்டிவிட்டு அவ்வாறானதொரு நிலைக்கு அவர்களை தள்ளிவிட வேண்டும்.
அவ்வாறு செய்தால் தங்களின் சுய அரசியல் ரீதியில் முன்னேற்றத்தை கொண்டு செல்லலாம், இதனை காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்றுகொள்ளலாம் என்ற திட்டத்தின் நோக்கமே இந்த அறிக்கையில் வெளிப்படுகின்றது.
இலங்கை அரசின் இந்த திட்டம் இனியொரு போதும் நடைபெறாது. இவ்வாறான பொய் வதந்திகளை கட்டிவிட்டே இலங்கை அரசு எமது மக்கள் மீது பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது.
இது மட்டுமல்லாது எமது தமிழ் மக்கள் மீது பொருளாதார தடையையும் விதித்திருந்தது. எமது தமிழ் மக்களுக்கு செய்த கொடுமையின் நிமித்தம் இன்று கடவுளின் வழியாக இலங்கையின் மீது ஒட்டுமொத்த நாடுகளும் சேர்ந்து பொருளாதார தடையை விதித்துள்ளது.
இலங்கை அரசு
கோட்டா, மஹிந்த அரசாங்கம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் இன்று தங்களுக்கு இவ்வாறானதொரு நிலை வரும் என்று.
எமது தமிழ் மக்களுக்கு செய்த பாவம் அவர்கள் தங்கள் வீடுகளில் கூட நிம்மதியாக இருக்க முடியாத அளவிற்கு அவர்கள் மக்களினாலேயே விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.
இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற சிங்கள அரசு எமது தமிழ் மக்கள் மீது பல நெருக்கடிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது எமது நிலங்கள் அபகரிப்பு, திட்டமிட்ட மீள் குடியேற்றம் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.
தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை இந்த அரசாங்கங்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
கோட்டபாய வீட்டுக்கு சென்றாலும் இனிவரும் ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் மூவின மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்பலாம்.
விடுதலை புலிகளை சொல்லி சொல்லி அரசியல் நாடகம் நடத்துவது இலங்கை அரசாங்கத்திற்கு புதியதல்ல.
எமது தமிழ் மக்களின் ஒவ்வொரு நினைவேந்தல்களின் போதும் இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களை வீட்டிலேயே முடக்க பார்க்கின்றனர்.
இலங்கை அரசு ஏதேனும் செய்து விட்டு விடுதலை புலிகள் மீது பழிகளை சுமத்துவதற்காகவும் இவ்வாறான செய்தியை வெளியிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்க தோணுகின்றது”என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.