அவுஸ்திரேலியாவில் இலங்கை விமானம் தாமதமானதற்கான காரணம் வெளியானது
கடந்த 15 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இலங்கை விமானம் ஒன்று கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல மணி நேரம் தாமதமாக சென்றதாக தெரியவந்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (24) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த கணினியின் பாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் உள்ளக அழுத்தம் தொடர்பான பிரச்சினை காரணமாக டுபாய் நோக்கி பயணித்த விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்களின் குத்தகை
மேலும், உலகில் இதுபோன்ற மற்ற சம்பவங்கள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒரு விமானம் கூட இல்லாததால், தற்போது பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களை பயன்படுத்தி இந்த சேவை நடத்தப்படுகின்றது.
இந்த விமானங்களின் குத்தகை காலம் முடிந்து விட்டதால், புதிய விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக திறைசேரியிலிருந்து குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றிய பலர் இராஜினாமா செய்துவிட்டு வேறு வேலைகளுக்குத் திரும்பியுள்ளதால், பொறியியல் துறையில் சுமார் 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதற்கு பணியாளர்களை சேர்ப்பது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.