இலங்கை வீரர் ருமேஷ் தரங்காவின் தங்கப் பதக்க கனவு - உதவி கரம் நீட்டும் டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர்
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்லும் தனது இலக்கை அடையும் வரை, அவருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் உலகத் தரம் வாய்ந்த ஈட்டிகளை வழங்குவதாக டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கிலேயே குறிப்பிட்டுள்ளார்.
ருமேஷ் தரங்காவின் பயிற்சியாளர் டோனி பிரசன்னாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கப் பதக்கம் பெறும் கனவு
மேற்படி பதிவின் படி, டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து, அரசாங்கத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட ஈட்டியுடன் கூடுதலாகத் தேவையான உபகரணங்களையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த உதவிக்கு ஈடாகத் தானோ அல்லது தனது டெம்பிள் குழும நிறுவனங்களோ எந்தவொரு விளம்பர ஆதரவையோ அல்லது வேறு எந்த வணிகப் பலனையோ எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீப காலங்களில் இலங்கை தடகளக் களத்தில் இருந்து வெளிவந்த மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக ருமேஷ் தரங்காவை வர்ணித்த அவர், திறமையான விளையாட்டு வீரர்களை வளர்ப்பதும், சர்வதேச அளவில் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதும் உள்ளூர் வணிகர்களின் பொறுப்பாகும் என்றார்.
ரூமேஷின் ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவு நனவாகும் வரை தனது உறுதிப்பாடு மாறாது என்று கூறிய சிறிசேன, அந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறும் வரை ஒரு தேசமாக ரூமேஷுக்குப் பின்னால் நின்று அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.