இஸ்ரேலிய இராணுவத்தினரால் கடத்தப்பட்டிருந்த இலங்கையர் விடுவிப்பு
இஸ்ரேலிய இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்த சமீரா மஹ்பூப்தீன் நேற்று (21) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி பௌசர் பாரூக் உறுதிப்படுத்தியுள்ளார்.
பலஸ்தீனத்தின் காசா மக்கள் எதிர்நோக்கும் பட்டினிச் சாவு முற்றுகை தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் சர்வதேச தன்னார்வலர்கள் சிலர் கப்பல் மூலமாக காசா பகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது இலங்கையரான சமீராவும் ஒரு துணை மருத்துவப் பணியாளராக அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தார்.
விடுதலை
அவர்கள் பயணித்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய ராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கப்பலில் பயணித்த அனைவரும் முகம் குப்புற கவிழ்க்கப்பட்ட நிலையில் விலங்கிடப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்வதேசத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தன.
இஸ்ரேலிய இராணுவத்தினரிடம் சிறைப்பட்டுள்ள சமீராவை விடுவிப்பதில் தலையிடுமாறு உள்நாட்டில் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்றைய தினம் சமீரா மஹ்பூப்தீன் இஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து துருக்கிக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் அவர் துருக்கியில் இருந்து நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பர்கள் ஒழுங்கு செய்துள்ளனர்.