சர்வதேசப் பிரகடனங்களை மீறிய இலங்கை : ஐ.நா. விதியின் கீழ் சட்ட நடவடிக்கை
சித்திரவதைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற கொடூரத் தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, அதன் வரைமுறைகளை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன விதிகளின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் உலக நாடுகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய நிலையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய நிலையம், நியூ லைன்ஸ் கற்கைகள் நிலையம், இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் மூலோபாய தர்க்கித்தல் செயற்திட்டம் ஆகிய 9 சர்வதேச அமைப்புகளே இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
சர்வதேச பிரகடனம்
மேலும் அந்தக் கூட்டறிக்கையில்,
இலங்கை அரசானது சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை கடந்த 1994ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கு முன்னரிருந்தே, அதாவது 1979ஆம் ஆண்டிலிருந்து தனிநபர்களைப் பலவந்தமாகக் கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும், வலிந்து காணாமலாக்குவதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக மோசமாகப் பயன்படுத்தி வருகின்றது.
இந்த சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்கள் பெருமளவுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் மிக கொடூரமான சித்திரவதைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பதை இலங்கையில் தொடர்ந்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் திட்டமிட்ட மறைத்து வருவதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மைகளை இன்னமும் அறியாமல் தவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் பிரகாரம், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை இலங்கை அரசு வேண்டுமென்றே தடுத்தது என நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள்
இவையனைத்தும் சித்திரவதைகள் அல்லது மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குச் சமனானவையாகும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.நா உப குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், நாட்டின் சகல பாகங்களிலும் சித்திரவதைகள் தடையின்றி இடம்பெறுவதை உறுதிப்படுத்தியிருந்தது.

அதேபோன்று, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமானது கடந்த 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், குறிப்பாக வடக்கில் தமிழர்களுக்கு எதிராகப் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் என்பவற்றை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளதுடன், இவை பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் ஆட்சிப் பீடமேறிய ஒவ்வொரு அரசின் கீழும் குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் கூட, இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டதாகத் தற்போதைய அரசு பொய்யான கருத்தொன்றை வெளிப்படுத்தியிருந்தது.
சர்வதேச நீதிப் பொறிமுறை
இந்த தண்டனையிலிருந்து விடுபடும் போக்கானது தடுப்புக்காவலின் கீழான சித்திரவதைச் சம்பவங்கள் மேலும் தீவிரமடைவதற்கே வழிகோலுகின்றது.
இந்தக் குற்றங்களைப் பொறுத்தமட்டில், இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறையில் எந்தவித ஆக்கபூர்வமான முன்னேற்றமும் இல்லாத நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரே தெரிவாக எஞ்சியுள்ளது.

இலங்கை ரோம் சாசனத்தில் கையெழுத்திடாத காரணத்தினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லை இங்கு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட ஏனைய உறுப்பு நாடுகள், இந்தப் பிரகடனத்தின் வரைமுறைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக அந்தப் பிரகடனத்தின் 30 ஆவது உறுப்புரையைப் பிரயோகித்து, சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri