இலங்கை போக்குவரத்து சபையின் விடாபிடி முடிவு (Photo)
புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் இன்று இடம்பெற்ற கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு வந்ததாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (Vishwalingam Manivannan) தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் ஒன்று இ.போ.ச மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டது.
ஆனாலும் அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருகிறது.
இந்நிலையில் இ.போ.ச அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனால் புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை கூட்டமொன்று இடம்பெற்றது.
இது தொடர்பாக இக்கூட்டத்தில் பங்குபற்றிய மாநகர முதல்வர் அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர், நகர அபிவிருத்தி சபை, இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

