இ.போ.சபையின் வட பிராந்தியத்தினது ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்பகிஸ்கரிப்பு (video)
இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (29.11.2022) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
யாழ்ப்பாண சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று (28.11.2022) திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பணிப்பகிஸ்கரிப்புக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த போராட்டம் வடபிராந்திய ரீதியாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிப்பகிஸ்கரிப்பு
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழைய முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் "எமக்கு பாதுகாப்பு வேண்டும்", "நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்", "தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக" உள்ளிட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
எனவே இந்த பணிப்பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வட மாகாணத்திலுள்ள 7 சாலைகளின் ஊழியர்கள் இன்று (29.11.2022) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வட மாகாணத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் எந்தவொரு சேவைகளும் இடம்பெறவில்லை.
செய்தி: ராகேஷ்
வவுனியா
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (29.11.2022) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தாக்கிய நபர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: திலீபன், ஷான்
மன்னார் அரச பேருந்து சாரதிகள் இன்று (29.11.2022) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரச போக்குவரத்து பேருந்து சாரதி ஒருவரை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஸ்கரிப்புக்கு ஆதரவு வழங்கியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி: ஆஷிக்