அவசர நிவாரண பொருட்களை அனுப்பிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இலங்கை
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணப்பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் தொலைபேசியில் உரையாடியபோது அரசாங்கத்தின் நன்றியை தெரிவித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவி
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதற்காக அரிசி, பருப்பு வகைகள், பால்மா, சீனி, ஆடைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட 950 மெட்ரிக் டொன் மனிதாபிமான உதவிகளை தமிழ்நாடு அரசு அண்மையில் அனுப்பியது.

இந்த நிவாரணப் பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இந்திய கடற்படை கப்பல்களில் அனுப்பப்பட்டன.
இந்த ஆதரவு ஒரு கடினமான காலகட்டத்தில் அரசின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாகவும், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான மக்கள் உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்றும் விஜித் ஹேரத் கூறினார்.
இந்த மீட்பு முயற்சிகள் முன்னேறும்போது நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.