பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக அணிதிரள வேண்டும் - தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அழைப்பு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் இனத்திற்கு பாதகமான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்திற்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் சர்வதேச அமைப்பாளர் ரவி வர்மா அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்கலுக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் சர்வதேச அமைப்பாளர் நடராஜா ரவிவர்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் சர்வதேச அமைப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை
தமிழ் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நீர்த்துப்போக வைக்கும் வகையில் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பு, சிங்கள குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் அடையாளங்களை அழித்தொழித்தல், அதாவது தமிழ் மக்களின் அடையாளங்களாக காணப்படும் இந்து ஆலயங்களை இடித்தும், அழித்தும், சிங்கள பௌத்த சின்னங்களை நிறுவி இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் பேரினவாத அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த போராட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள்,
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்
தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாளைய தினம்
முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு தமிழ் தேசிய
பண்பாட்டு பேரவையின் சர்வதேச அமைப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.