சுமனரத்ன தேரர் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து! ஜனாதிபதியை எதிர்க்க துணியும் சிங்கள மக்கள்
கிழக்கு மாகணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிங்கள மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காக எதிராக பொறுப்புடன் செயல்படுவதாகவும், அவர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் திட்டங்கள்
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு சென்றுள்ளார். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பல நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
எனினும், அவரது திட்டங்களில் விகாரைகள் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன், மட்டக்களப்பில் உள்ள முக்கிய தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுக்கவும் அவர் திட்டமிடவில்லை.
இந்த நிலையில், நாளைய தினம் ரணில் விக்ரமசிங்க எமது பிரேதசத்துக்கு வரவுள்ளதாகவும், இதனை முன்னிட்டு போராட்டங்களை முன்னெடுக்குமாறும் ஒரு சில தரப்பினர் எங்களுக்கு கூறுகிறார்கள். இங்குள்ள சிங்கள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோருமாறு கூறுகிறார்கள்.
சட்ட நடவடிக்கை
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எமக்கு எதிராக பலரின் பார்வை திரும்பும். இதனால் எமக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எமக்கு தண்டனை வழங்க முடியும். இதனால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் எம்மை பேசவிடாது, மௌனமடைய செய்ய முடியும்.
ஆனால் இதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். சிங்கள மக்களுக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். கிழக்கு மாகாணத்துக்கு ஜனாதிபதி பயணம் செய்யும் போதெல்லாம் இங்கு மதவாதம் தூண்டப்படுகிறது.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க செயல்படுவதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், தமிழ் மக்களை கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்க செயல்படுவதால் சிங்கள மக்களுக்கு ஏற்படும் அழிவுகளை குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)