புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்காக வழங்கப்படும் பணம்..! வெளியானது உண்மை தகவல்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் யூடியூப் அலைவரிசையினால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக பணியகம் குறிப்பிடுகிறது.
எனினும் குறித்த விடயம் முற்றிலும் தவறானது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மோசடி நடைமுறை
குறித்த யூடியூப் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகலை நாட்டிலுள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திலும் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள போதும் பணியகம் அத்தகைய அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடி நடைமுறைக்குள் விழ வேண்டாம் என்று பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறானதொரு வேலைத்திட்டம் இதுவரையில் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இது புலம்பெயர்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரமே எனவும் பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள்
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பரப்புவதற்கு இவ்வாறான சமூக ஊடகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், Facebook, Youtube மூலம் மட்டுமே வெளியிடப்படும் என்றும் பணியகம் கூறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
