முடங்கியது கிழக்கு: பல்வேறு கட்சிகள்- சங்கங்கள் ஆதரவு (Photos)
நாட்டின் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு நிர்வாக முடக்கப் போராட்டத்துக்கு பல்வேறு சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், மக்கள் எதிர்நோக்கவிருக்கும் கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் (25.04.2023) வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான நிர்வாக முடக்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் – மரபுரிமைகள் அழிப்புக்கு எதிராகம் இந்த முழு நிர்வாக முடக்கப் போராட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
முடங்கியது வாழைச்சேனை
அந்த வகையில், இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு நிர்வாக முடக்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வாழைச்சேனையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடிக் காணப்பட்டுள்ளது.
அத்தோடு, அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்குவதையும், தனியார் வங்கிகள் சில மூடப்பட்டுள்ளது.
தமிழ் பகுதியிலுள்ள பாடசாலைகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதுடன், போக்குவரத்துக்கள் வழமை போன்று இயங்குகின்றது. வாழைச்சேனை பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள் பொது முடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- குகதர்சன் நடேசன்
மட்டக்களப்பு
அரசாங்கத்தினால் பயங்கர வாத சட்டத்திற்கு மாற்றாகப் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்கள் பொது சந்தைகள் மற்றும் அனைத்து நிர்வாகங்களும் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதி வெறிச்சோடி இன்றைய தினம் (25.04.2023) காணப்படுகின்றது.
அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடையடைப்புகள், பாடசாலைகள் முடக்கம் மற்றும் மக்கள் நடமாட்டம் என்பன குறைவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிர்வாக முடக்கப் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்துத்துறையினர், பல்கலைக்கழக மாணவர்கள் எனச் சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.
கர்த்தால், செங்கலடி பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கப் போராட்டம் காரணமாக பொதுச்சந்தை, உள்ளிட்ட பிரதான வர்த்தக நிலையங்கள், கடைகள், நகைக்கடைகள், உள்ளிட்ட அனைத்தும் செவ்வாய்கிழமை திறக்கப்படாமல் முடங்கியுள்ளது.
- லம்பேர்ட் , வடிவேலு சக்திவேல்
திருகோணமலை
நிர்வாக முடக்கப் போராட்டத்துக்கு ஆரதவு தெரிவிக்கும் வகையில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடைய பகுதிகளில் சகல துறைகளும் இன்றைய தினம் (25.04.2023) முடங்கியுள்ளன.
திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், கடைகள்
பூட்டப்பட்டு இருந்தன, பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை இதனால்
பாடசாலைகள் இயங்கவில்லை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து இருந்தது.












