ஒற்றுமையாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும்: அனந்தி
வடக்கு, கிழக்கு தழுவிய பூரண நிர்வாக முடக்கத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து, அரசின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு ஒருமித்து ஒற்றுமையாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் (25.04.2023) நடைபெறவிருக்கும் வடக்கு, கிழக்கு தழுவிய பூரண நிர்வாக முடக்கம் குறித்து, இன்றைய தினம் (24.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த மக்கள் மத்தியில் எதுவித அபிப்பிராய கோரலும் இடம்பெறாது. அது குறித்து விமர்சனங்கள் நாடாளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகின்றது.
இந்த நாட்டில் இருக்கக் கூடாது
30 வருட காலமாகத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தங்கள் காரணமாக பாரியதொரு தாக்கத்தினை இந்த பயங்கரவாத தடைச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை அப்போது ஆட்சியில் இருந்த தமிழ் தலைமைகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் அனுபவிக்கின்ற மிக மோசமான நிலையை உருவாக்கி இருக்கின்றது.
இன்று சர்வதேச மட்டத்திலும் சரி, ஐக்கிய நாடுகள் சபையிலும் சரி இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்ற ஒரு சட்டமே இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.
இந்த நிலையில், மீளவும் இலங்கை அரசாங்கம் எதேச்சதிகாரமான முறையில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உருவாக்க முயற்சிப்பது என்பது சர்வதேசத்தினுடைய பாரிய எதிர்ப்பினையும் சம்பாதிக்கின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.
ஊழல் மோசடிகள்
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அப்பாவி மக்கள் கைது செய்யப்படுகின்ற நிலையும் முப்படைகளினுடைய மேலாதிக்கமும் உயர்வடைந்து செல்வதனையும் நாங்கள் காணலாம்.
இந்த சட்டத்திற்கு அப்பால், ஊழல் மோசடிகள் குறித்து ஒரு ஒழுங்கான வலுவான- சட்டம் வராத நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களும் தப்பித்துக் கொள்ளுகின்ற ஒரு நிலையைத்தான் தோற்றுவித்திருக்கின்றது.
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நாங்கள் முற்றாகவே நிராகரித்திருக்கின்றோம். இது நாட்டுக்கு உகந்ததல்ல. அதேநேரம், சர்வதேசம் இச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
பூரண நிர்வாக முடக்கத்திற்கு அழைப்பு
உருவக மாற்றங்கள் செய்து எந்த ஒரு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச் சட்ட போர்வையில் கொண்டு வந்தாலும் ஜனநாயக ரீதியாகப் போராடும் இந்த மக்களை அடக்குகின்ற, ஒடுக்குகின்ற ஒரு சட்ட மூலமாக இது காணப்படுகின்றது என்ற அச்சம் பொதுமக்களுக்கு நிலவுகின்றது.
இந்த நிலையில், நாளைய தினம் வடகிழக்கு தழுவிய ரீதியில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகமாக நாங்கள் பூரண ஆதரவினை வழங்குகின்றோம்.
எங்களுடைய மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு இருக்கின்ற இந்த தருணத்திலே இலங்கை அரசாங்கம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
எங்களுடைய இந்த சைவ தலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்ற வேலையை இந்த அரசு திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள்
இவ்வாறான சூழ்ச்சியான மதவாதங்களைத் தூண்டுகின்ற இந்த அரசினுடைய செயலை நாங்கள் கண்டிக்கிறோம்.
மேலும், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டு, இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்ற இந்த புதிய சட்டமூலத்தையும் திணிப்பதற்கு அரசு முயலுகிறது.
அனைத்து பிரச்சினைகளையும்
முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் இந்த நிர்வாக முடக்கல் முன்னெடுக்க வேண்டும்
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
