வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து(video)
நாளையதினம் (25.04.2023) நடைபெறவிருக்கும் நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு கோரி வவுனியா நகர்ப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை இணைந்து இன்றையதினம் (24.04.2023) குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தினை நாளையதினம் (25.04.2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எமது இனத்திற்குப் பாதகமான அதன் கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் செயலாளர் ந.கருணாநிதி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குகன், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நி.பிரதீபன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் வடக்கு கிழக்கிலே நடைபெற இருக்கின்ற நிர்வாக முடக்கலுக்காக வவுனியாவில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி அரசாங்கம் கொண்டு வருகின்ற புதிய பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்படி துண்டுப்பிரசுரம் வழங்குகின்றோம்.
சிங்கள முற்போக்கு சிவில் சமூகம்
கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்த அளவு தூரம் தமிழ் மக்களைப் பாதித்திருக்கிறது, எவ்வளவு தூரம் உயிரிழப்புகள், சொத்தழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதனை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம்.
அதைவிட மிக மோசமான முறையிலே இந்த பயங்கரவாத தடை சட்டம் நாடாளுமன்றத்திலே கொண்டு வரப்பட இருக்கின்றது.
ஆகவே நாடாளுமன்றத்திலே இருக்கக்கூடிய அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த புதிய பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
அதே போல் இதுவரை காலமும் தமிழ் மக்கள்தான் இந்த பயங்கரவாத தடை சட்டத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை இருக்கிறது.
அதைவிட இனிவரும் காலத்தில் தெற்கிலே இருக்கக்கூடிய சிங்கள முற்போக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
ஒத்துழைப்பை - ஆதரவை வழங்க வேண்டும்
ஆகவே, தமிழ் மக்கள் இதுவரை காலமும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட மோசமான அளவுக்கு தெற்கில் இருக்கக்கூடிய சிங்களவர்களும் பாதிக்கப்பட இருக்கிறபடியால் ஆகவே தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். பயங்கரவாத தடை சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
அதேபோல், வடக்கு கிழக்கிலே நடைபெறுகின்ற பௌத்த மயமாக்கல், ஆலயங்கள் இடிப்பது அல்லது பௌத்த சிலைகளை நிறுவுவது போன்ற அனைத்து விடயங்களுக்காகவும், நாளையதினம் இந்த பூரணமான கடையடைப்புக்குப் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை, ஆதரவை வழங்க வேண்டும்.
அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு நாங்கள் இந்த வவுனியா நகரில் இருக்கக்கூடிய அனைத்து வர்த்தக நிலையங்கள், அனைத்து பொது அமைப்புகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடைய ஆதரவைக் கோரி இந்த துண்டுப்பிரசுரத்தை வழங்க இருக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் ஆதரவு
வடக்கு - கிழக்கில் நிர்வாக முடக்கல் அனுஷ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி,
ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாகக் கோரிக்கை விடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.









அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
