மக்கள் விரும்பும் விதத்தில் தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்: சரத் பொன்சேகா
இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டுமென்றும், மக்கள் விரும்பும் விதத்தில் தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்தனகல்லவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் தலைவர்களால் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதையே பார்க்க முடிகின்றது. தேர்தல் நேரத்தில் நிவாரணம் வழங்குகின்றார்கள். உங்களுக்குத் திருமணம் அல்லது இறுதிச் சடங்கு நடந்தால் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
தேசத்தை வளர்க்கும் ஆற்றல்
நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கும் போது அவர்களின் தகுதியைப் பார்க்கவில்லை. தேசத்தை வளர்க்கும் தொலைநோக்குப் பார்வை அவர்களுக்கு இருக்கிறதா என்று நீங்கள் பார்க்கவில்லை.
எனவே தேசத்தின் இன்றைய நிலைக்கு அரசியல்வாதிகளைப் போலவே மக்களும் பொறுப்பாகும்.
தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சரியான பார்வை இல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்.
இதேவேளை நான் போராட்டம் மூலம் ஆதாயம் பெற முயற்சிக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். இது தவறு.
மக்கள் போராட்டம்
போராட்டம் என்பது மக்கள் மனதில் இடம்பிடித்த ஒன்று. என் மனதிலும் போராட்டம் இருக்கின்றது.
போராட்டத்தில், ஈடுபடுவதற்கு ஒருவர் காலி முகத்திடலுக்கு செல்ல வேண்டியதில்லை. உங்கள் கிராமங்களில் நீங்களே செய்யலாம்.
தற்போதைய நாடாளுமன்ற அமைப்பு உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதில்லை என்பதால் நீங்கள் வீதியில் இறங்கி நிராயுதபாணியான புரட்சியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.