அரசியல் மீள் பிரவேசம் தொடர்பில் கோட்டாபயவின் தெளிவுப்படுத்தல்
"அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், எனக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் யார் முடிவு எடுத்தது?"என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மை நிலவரம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று ஆர்வம் காட்டி வருகின்றது எனவும், குறித்த கட்சியின் பிறிதொரு குழு தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“நான் பதவி ஆசை பிடித்தவன் என்றால் ஜனாதிபதிப் பதவியிலிருந்தே விலகியிருக்கமாட்டேன்.
ராஜபக்சர்களுக்கு பதவி ஆசை இல்லை
எனக்கு மட்டுமல்ல ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் பதவி ஆசை இல்லை. மக்களின் அமோக ஆணையுடன் தான் ராஜபக்சர்கள் பதவிக்கு வந்தார்கள். இதனை எதிரணியினரும், தாங்கள் நினைத்த மாதிரி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது பிரதமர் பதவி வகிக்கும் தினேஷ் குணவர்த்தன அந்த பதவிக்குரிய முழுத் தகுதிகளையும் கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த அரசியல்வாதிகளுள் அவர் முக்கியமானவர்"என கூறியுள்ளார்.