உக்ரைன் - ரஷ்ய மோதலால் ஏற்படப்போகும் நெருக்கடி! தயார் நிலையில் இலங்கை
சமீபகாலத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே அதிக சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்துசேர்ந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சின் செயலாளார் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நெருக்கடியால் அந்த நாடுகளில் சுற்றுலாப்பயணிகள் வருவது பாதிக்கப்படலாம். இது பாரிய தாக்கத்தை எங்களிற்கு ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு உக்ரைன் நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு இலங்கை தயாராகி வருகின்றது.
ரஷ்யாவின் நடவடிக்கை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் தேயிலை ஏற்றுமதிக்கும் எரிபொருள் இறக்குமதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காணப்படுகின்றது.
உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கை தேயிலையை விற்பனை செய்வது கடினமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு மேலும் அதிக தொகையை இலங்கை செலுத்தவேண்டிய நிலையேற்படலாம்.
உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு மேலும் டொலர்கள் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.