ஆபத்தான கட்டத்தில் இலங்கை! மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
சர்வதேச ரீதியில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமைகள் காரணமாக, நாட்டின் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக மாறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிதிக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு அல்லது சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சுட்டிக்காட்டியிருந்தார்.
டொலர் கையிருப்பு
இதனை மத்திய வங்கி ஆளுநர் நினைவு கூர்ந்தார். “இந்தியாவிடம் சுமார் 700 பில்லியன் டொலர் கையிருப்பு இருந்த போதிலும், அவர்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

உலகில் நிலவும் இந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் நிச்சயமற்ற நிலை நீடித்தால், இலங்கை மேலும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.
நிதி அமைச்சு
தற்போதைய வேகமான மாற்றங்களுக்கு மத்தியில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்ன நடக்கும் என்பதைக்கூட துல்லியமாகக் கணிப்பது கடினம்” என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலைமையைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஏற்கனவே அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதிக்குழுவின் தற்காலிகத் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலும் இதுபோன்ற மாற்று வழிமுறைகள் குறித்து நிதி அமைச்சு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.