வவுனியாவில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை: சிரமத்தில் மக்கள்
புதிய இணைப்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள், பாமசியாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும் இரண்டாவது நாளாக (14.02.2024) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 11ஆம் மற்றும் 16ஆம் ஆகிய திகதிகளில் பணிப்புறக்கணிப்பில், ஈடுபட்டிருந்தமையுடன் நேற்றையதினமும் (13.02.2024) சுகயீன விடுமுறையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
பேச்சுவார்த்தை
இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றையதினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே இன்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு பூராகவும் நடைபெறும் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரமத்தில் மக்கள்
இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள் என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றதோடு மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர்கொண்டு இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.
இதேவேளை தூர இடங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.













இத்தனை பிளாக் பஸ்டர் படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியதா?.. இப்படி மிஸ் செய்துவிட்டாரே Cineulagam

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
