இலங்கையை அச்சுறுத்தும் கோவிட் தொற்று! நாள் ஒன்றின் அதிகூடிய மரணங்கள் பதிவானது
இலங்கையில் மேலும் 54 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக உயர்வடைந்துள்ளது.
மே மாதம் 10ம் திகதி முதல் ஜூன் 7ம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் இன்றைய தினம் கோவிட் மரணங்கள் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
இதன்படி, மே 10ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் 15 கோவிட் மரணங்களும், ஜூன் 2ம் திகதி முதல் 7ம் திகதி வரையில் 39 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளது.
மே 10 மற்றும் 15ம் திகதிகளில் தலா ஒருவரும், 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தலா இருவரும், 21ம் திகதி ஒருவரும், 22ம் திகதி இருவரும், 23ம் திகதி ஒருவரும், 28ம் திகதி இருவரும், 29ம் திகதி ஒருவரும், 31ம் திகதி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 2ம் திகதி எட்டு பேரும், 3ம் திகதி ஆறு பேரும், 4ம், 5ம் மற்றும் 6ம் திகதிகளில் தலா ஏழு பேரும், 7ம் திகதி நால்வரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 22 பெண்களும், 32 ஆண்களும் அடங்குகின்றனர். இதில் ஆறு பேர் வீட்டில் வைத்தும், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், 46 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் 2,637 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 210,516 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,214 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நோய் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.