மே 18 தமிழர் இனப்படுகொலை பிரேரணை! கனடாவிடம் முறையாக ஆட்சேபித்த இலங்கை!
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை தனது கடுமையான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட ,இலங்கைக்கான கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானிடம், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், தமது ஆட்சேபனையை வெளியிட்டார்.
நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பொய்யான உள்ளடக்கத்தை அவர் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை என்ற கனடாவின் நிலைப்பாட்டுடன் பொருள் அடிப்படையில், பிரேரணை முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
Today, the Canadian parliament unanimously passed a motion to recognize May 18th as Tamil Genocide Remembrance Day.
— Gary Anandasangaree (@gary_srp) May 18, 2022
On this very important day, Canada becomes the first national parliament in the world to recognize May 18th of each year as Tamil Genocide Remembrance Day. pic.twitter.com/tfkwD2eAZl
இந்தநிலையில் குறிப்பிட்ட சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழில்நுட்ப சொற்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த பிரேரணையில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தை வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, செயல் உயர் ஸ்தானிகர் ஸ்ட்ரோஹான், கனடாவின் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையின் தன்மையைக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தகுந்த நடவடிக்கைக்காக கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு தாம் அறிவிக்கவும் அவர் இணக்கம் வெளியிட்டார்.