மீண்டுமொரு போர் வராத சூழலை உருவாக்குவோம்! சஜித் அறைகூவல்
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காகத் தியாகங்களைச் செய்த முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் அதேவேளை, மீண்டும் ஒரு கொடூர யுத்தம் ஏற்படாத வகையிலான சமூக சூழலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பத்தரமுல்லை, நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக அமைந்துள்ள படைவீரர் நினைவுத் தூபியில் நேற்று நடைபெற்ற படைவீரர்கள் நினைவுத் தின நிகழ்வில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, "30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த, நமது கௌரவத்துக்குப் பாத்திரமான முப்படை வீரர்களுக்கு எனது நன்றி கலந்த மரியாதையைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்து, உடல் பாகங்களை இழந்து, இரத்தம் சிந்தி நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய மகத்தான கடமையை நாம் என்றும் மதிப்போம். யுத்தத்தாலும் பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிலையான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
மீண்டும் ஒருமுறை இத்தகையதொரு கொடூர யுத்தமோ அல்லது பயங்கரவாதச் சூழலோ நாட்டில் உருவாகாத வகையில், முறையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளும், ஆழமான நல்லிணக்க முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பேணிக் காத்து, தேசத்தைச் சௌபாக்கியத்தை நோக்கி முன்னோக்கி அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். இதன் பொருட்டு அன்று முப்படை வீரர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்." என்றார்.






