மாபியாக்களினால் திட்டமிட்டு நடத்தப்படும் அரிசி தட்டுப்பாடு
அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், அரிசி இறக்குமதி விவகாரத்திலும் பாரிய மோசடிக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.
தேவைக்கு அதிகமான அரிசி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘தேவைக்கு அதிகமாக அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் அடுத்த அறுவடையின்போது விவசாயிகளுக்கு நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத அபாயம் காணப்படுகின்றது.
காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், அரிசி தட்டுப்பாடு அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் நெல் மற்றும் அரிசி என்பவற்றை மறைத்து வைத்திருக்கின்ற நிலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசியின் அளவை அரசாங்கத்தால் இலகுவாக கண்டுபிடிக்க முடியும்.
அரிசி இறக்குமதி
சில அதிகாரிகள் இந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அடிபணிந்துள்ளதால் அல்லது அவர்களால் அரசாங்கத்துக்கு தவறான தகவல் வழங்கப்படுவதன் காரணமாகவே அதனை அரசாங்கத்தால் கணிப்பிட முடியாதுள்ளது.
அரிசி தட்டுப்பாட்டை அரசாங்கத்தால் முகாமைத்துவம் செய்ய முடியும். அதேபோன்று வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுவது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுவதோடு ஊழல் மிக்கதாகவும் உள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான பணம் இந்த பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களாலேயே வழங்கப்பட்டுள்ளது. அரிசியைப் பதுக்கி தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள அவர்களாலேயே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இதன் பின்புலத்தில் பாரதூரமான பின்விளைவு ஏற்படும். அடுத்த அறுவடையின்போது நாட்டினுள் தேவைக்கதிகமான அரிசி காணப்பட்டால், விவசாயிகளுக்கு நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
