பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இலங்கை
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் குறித்து நாடுகளுக்கு இடையே சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக நாடுகளின் புகழ்பெற்றவர்களின் குழு ஒன்றை அமைக்க இலங்கை முன்மொழிந்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற 3வது பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை என்ற தொனிப்பொருளிலான உயர்மட்ட மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான சவால்கள்
நவம்பர் 18ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி தொடர்பான 3வது மாநாட்டிற்கு உயர் ஸ்தானிகர் மொரகொட இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்த இந்த மாநாட்டில் தொண்ணூற்று மூன்று நாடுகள் மற்றும் பலதரப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சர்வதேச ஒத்துழைப்புகள்
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவியில் உலகளாவிய போக்குகள் மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள தேவையான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து, இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இலங்கை சார்பில் அறிக்கையை சமர்பித்த உயர்ஸ்தானிகர் மொரகொட, தமது கருத்தில், பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக எதிர்கொள்ளும் பன்முக சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒத்துழைப்பில் உறுப்பு நாடுகளின் அரசியல் விருப்பம் மிக முக்கியமான அங்கமாகும் என்று குறிப்பிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் பாரிஸிலும் கடந்த 2019ஆம் ஆண்டில் மெல்போர்னிலும் முறையே 1வது மற்றும் 2வது அமைச்சர்கள் மாநாடுகள் பயங்கரவாதத்துக்கு பணம் இல்லை என்ற தொனிப்பொருளில் நடைபெற்றுள்ளன.