இலங்கை மீள எவ்வளவு காலம் செல்லும்..! பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (19) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மூன்று வருட சலுகைக் காலம்
மேலும் தெரிவிக்கையில், கடன் மறுசீரமைப்பு மூலம் கிடைத்த மூன்று வருட சலுகைக் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, 2028ஆம் ஆண்டுக்குள் சரியான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல உலகநாடுகளுக்கு ஒரு தசாப்தம் வரை சென்றாலும், இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலமே செல்லும் என்று கணிப்பிட முடியும்.

சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றில் பகிரங்க கேள்வி - அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர்
முன்னுரிமை அடிப்படையில் செலவு
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1%ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் நிதியை செலவிடுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
பொருளாதாரத்தை விஸ்தரித்து பொருளாதாரத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்வதன் மூலமும், குடிமக்களை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.




