அமைச்சர்களின் அச்சத்தால் தீராத மக்கள் பிரச்சினைகள்! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசுவதற்கு அஞ்சுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அவர்களது இந்த அச்சம் காரணமாகவே, மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
நிதியுதவி போதுமானதல்ல
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அனர்த்த முகாமைத்துவம் குறித்த அரசின் விசேட கூட்டத்தில் நான் கலந்துகொண்டது எந்தவொரு அரசியல் நோக்கத்துக்காகவும் அல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பீட்டுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி போதுமானதல்ல என்பதை அங்கு நான் ஜனாதிபதியிடம் நேரடியாகவே சுட்டிக்காட்டினேன்.
நாட்டின் தலைவர்கள் யாராக இருந்தாலும், மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் குரல் கொடுக்கவே மக்கள் எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த காலத்தில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று மார்தட்டிய 'வியத்மக' அறிஞர்களுக்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் இன்று தங்களை 'நடமாடும் நூலகங்கள்' என்று கூறிக்கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் நடக்கப் போகின்றது. நியூட்டனின் விதிப்படி மேலே சென்றால் கீழே விழுந்துதான் ஆக வேண்டும்.
தற்போதைய அரசு எரிபொருள் விலையை 20 ரூபாவால் குறைத்துள்ளதாகக் கூறுகின்றது. ஆனால், இதனால் பஸ் அல்லது முச்சக்கரவண்டி கட்டணங்கள் எதுவும் குறையவில்லை.
எனவே, ஊடகங்கள் தேவையற்ற வதந்திகளைத் தவிர்த்து, மக்களின் உண்மையான எரியும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
நாட்டை முழுமையாக நாசமாக்கி, அதன் மீது அரசியல் செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டின் நன்மைக்காக எப்போதுமே எமது ஆதரவு இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.