இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
நல்லிணக்க செயற்பாடுகளுக்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய சட்டமூலத்தின் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.
நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் பற்றிய ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதுபற்றி கருத்து வெளியிட்டார்.
சட்டவாக்கம் நிறுவன ரீதியான செயற்பாடுகள், காணிப்பிரச்சினை, சிறைக்கைதிகளை விடுதலை செய்தல், அதிகார பகிர்வு ஆகிய ஐந்து விடயங்கள் தொடர்பான வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
உண்மை மற்றும் மீள் இணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தேசிய காணி சபையை ஸ்தாபித்தல், தேசிய காணிக்கொள்கையை தயாரித்தல், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனான முறையில் முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.
இழப்பீடு செலுத்துவதற்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் பற்றி தற்சமயம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் பணிகளை பூர்த்தி செய்து எதிர்வரும் சில மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு இதன்போது வலியுறுத்தினார்.
சிறைக்கைதிகளை விடுதலை செய்தல், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குதல் போன்ற விடயங்கள் பற்றிய விரிவான அறிக்கையை நீதியமைச்சின் ஊடாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.
You My Like This Video