2022 ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணி: பொறுப்பற்ற கருத்தை வழங்கிய ஷம்மி சில்வா மீது குற்றச்சாட்டு
2022 ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்தமை தொடர்பான செய்தியாளர் மாநாட்டின்போது இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா வழங்கிய பதில் பொறுப்பற்ற வகையில் அமைந்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் இது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவின் கூற்றுகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியபோதே, கிரிக்கட் தலைவர் இந்த பொறுப்பற்ற பதிலை வழங்கியுள்ளார்.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி
2022 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இரகசிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக நளின் பண்டார நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன் காரணமாக போட்டியை இங்கு நடத்தினால் வரக்கூடிய சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு இழந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை ஊடகவியலாளர் கிரிக்கட் தலைவரிடம் கேட்டபோது, நளின் பண்டார யார், இதை எப்போது சொன்னார், என்று அவர் ஊடகவியலாளர்களிடம் பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையில், போட்டியை இங்கு நடத்தினால் நாங்கள் பெறுவதை விட 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக தற்போது பெற்றுள்ளோம். இதை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், அவர் கணிதம் சரியாகத் தெரியாத ஒருவர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கிரிக்கட் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் சுமத்தப்பட்ட இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டையும், ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும், இலங்கை கிரிக்கட்டின் தலைவர் எப்படி அறியாமல் இருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஊடக விமர்சனத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நிச்சயமாக, இது போன்ற குற்றச்சாட்டுகள் பற்றி மேலும் அறிந்து அதற்கேற்ப பதிலளிக்க வேண்டியது, உயர் அதிகாரி என்ற வகையில் கிரிக்கட் தலைவரின் கடமையல்லவா, என்றும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் ஸ்திரமின்மை
அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மைதானங்களின் விளக்குகளை எரியூட்டுவதற்கு எரிபொருள் தட்டுப்பாடு இருந்ததால், போட்டிகளை உள்ளூரில் நடத்த முடியாமல் போனதற்கு சரியான காரணங்கள் இருந்திருக்கலாம், ஆனால் கணிதம் பற்றி பேசியது பொருத்தமானதாக இல்லை.
இந்த இக்கட்டான காலங்களில் இலங்கை போட்டிகளை நடத்தியத்தியிருந்தால், ஸ்ரீலங்கா
கிரிக்கட்டுக்கு மாத்திரமல்ல. ஹோட்டல் போன்ற துணை சேவைகளுக்கும் நிறைய
வருமானம் கிடைத்திருக்கும் என்பதை அவர் தெரிந்திருக்கவில்லை என்றும் ஊடகம்
விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.