அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்றைய தினம் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது வரை சுமார் 14 தமிழ் அரசியல் கைதிகள் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இலங்கை அரசு 6 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுவித்திருப்பதையும், தகுதியான இன்னும் பல கைதிகளை படிப்படியாக விடுவிக்க தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கரிசணை கொண்டு அவர்களை விடுவிப்பதன் மூலம் சிறைகளில் பரவிவரும் பெருந்தொற்றிலிருந்து அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் படி காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகளினால் கூட்டுப்பிரார்த்தனை இன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



