புத்தாண்டுக்காக சொந்த ஊருக்கு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை தொடருந்து திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து விசேட தொடருந்து
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சேவைகளின் ஊடாக நாளாந்தம் மேலதிகமாக 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை தொடருந்து திணைக்களம் தற்போது சேவையில் ஈடுபடுத்தியுள்ள தொடருந்துகளுக்கு மேலதிகமாக, கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து விசேட தொடருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
இக்காலப்பகுதியில் பயணிகளிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக அறவிடுதல், சேவையின் தரம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களைக் கண்காணிப்பதற்காக பிரதான நுழைவாயில்களை உள்ளடக்கிய வகையில் 24 மணிநேரமும் இயங்கும் நடமாடும் பரிசோதனை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவசர இலக்கம்
மேலும், 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் செயல்பாட்டு அறை மற்றும் நுகர்வோர் சேவைப் பிரிவொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிறுவியுள்ளது.
பொதுமக்கள் இது தொடர்பான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை 1955 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் மற்றும் 071 259 55 55 என்ற வாட்ஸ்எப் இலக்கம் ஊடாகத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.