சர்வதேச மேடையில் ஹரிணியின் குரல்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம்(08.03.2026) நள்ளிரவு இலங்கையிலிருந்து புறப்பட்ட பிரதமர், நேற்று திங்கட்கிழமை காலை மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை
விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது பிலிப்பைன்ஸ் அரசின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்துப் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நலன்சார் விடயங்கள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வதில் பிரதமரின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.


