பரபரப்பாகும் இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டி! இலங்கையில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதில்லை என்ற தனது முடிவிலிருந்து பாகிஸ்தான் அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதற்கு முன்னதாக எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி இந்திய அணிக்கு எதிராகப் பாகிஸ்தான் விளையாடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்வரும்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி நடைபெறவுள்ளது.
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
இதேவேளை, ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் இது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்ட நிலையில், பாகிஸ்தான் அரசாங்கமும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாத ஒரு சூழ்நிலைய இருந்த நிலையில், அரசாங்கம் கடந்த சில நாட்களாகப் பல்வேறு தலையீடுகளை மேற்கொண்டதுடன், அதன் இறுதிப் பெறுபேறாகத் தற்போது இந்தப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இப்போட்டியைப் பார்வையிட பெருமளவான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதனைக் கருத்தில் கொண்டு பொலிஸார் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.