அக்கரைப்பற்றில் மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய விசேட கூட்டம்(Photos)
அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்,ஏ.சி.எம்.றியாஸ் ஒருங்கிணைப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளரும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமுமான ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மீனவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.
இதன் போது மீனவர்கள் ஆழ்கடலில் மிகவும் தூரத்துக்குச் சென்று மீன் பிடியில் ஈடுபடும் போது ஏற்பட்ட அனர்த்தங்கள் பற்றிக் குறிப்பிட்டு வானொலி தொடர்பாடல் சாதனங்களைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இக்கோரிக்கையை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முன்வைப்பதுடன் தொலைத் தொடர்பு ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆலோசனையைப் பெற்றுத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஒலுவில் துறைமுகத்தில் மண் நிரம்பி உள்ளதால் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றி பலர் சுட்டிக்காட்டிய போதும் இதனைத் தீர்ப்பதற்குப் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது எனவும் குறித்த விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்வை பெற முயற்சிப்போம் என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் இராணுவத்தினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள்,மீனவ
சங்கங்களின் பிரதி நிதிகள், பொறியியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.