ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு!
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் தலைமையிலான ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சியின் மாட்ரிட் தலைமையகத்திற்குள் அந்த நாட்டுப் பொலிஸார் அதிரடியாகப் புகுந்து சோதனையிட்டுள்ளனர்.
சான்செஸ் அரசாங்கத்தைச் சுற்றிப் பல ஊழல் வழக்குகள் அடுத்தடுத்துப் பதிவாகி வரும் நிலையில், நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகள்
முன்னாள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில தனிநபர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தேசிய நீதிமன்ற விசாரணையின் கீழ், இந்தச் சோதனையை மேற்கொள்ள சிவில் காவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரான லெய்ரே டீஸ் என்பவர், அரசு ஊழல் தடுப்புப் பிரிவின் செயல்பாடுகளை முடக்க முயன்றதாகவும், அதற்காகக் கட்சியிடமிருந்து பணம் பெற்றாரா என்பது குறித்தும் நீதிபதி சாண்டியாகோ பெட்ராஸ் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.

இந்த விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைச் சேகரிக்கவே பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட நீதிமன்ற உத்தரவு என்பதால், தாங்கள் அமைதியுடன் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், ஸ்பெயினின் முன்னாள் சோசலிச பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் சபதேரோ விமான நிறுவனத்தின் அரசு நிதியுதவித் திட்ட முறைகேடு வழக்கில் முறைப்படியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இடைத் தேர்தல்
அதுமட்டுமன்றி, தற்போதைய பிரதமர் சான்செஸின் மனைவி மற்றும் சகோதரர் மீதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தச் சூழலில், ஸ்பெயினின் முக்கிய எதிர்க்கட்சியான பழமைவாத மக்கள் கட்சியின் தலைவர் ஆல்பர்டோ நுநெஸ் ஃபைஜோ, சான்செஸ் அரசாங்கத்தில் ஊழல் நாற்றம் அடிப்பதாகக் கடுமையாக விமரிசித்துள்ளதுடன், நாட்டில் உடனடியாக இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த போது பிரதமர் சான்செஸ் வத்திக்கானில் இருந்ததால், இந்த அதிரடிச் சோதனை மாட்ரிட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தன் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் வலதுசாரிகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் "அவதூறு பிரச்சாரம்" என்று பிரதமர் சான்செஸ் தொடர்ந்து மறுத்து வருகிறார்.