சியோலில் ஏழு மாதக்குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! பெற்றோர் வழக்கு தாக்கல்
தென் கொரியாவில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அந்தக் குழந்தைக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றபோதும், மருத்துவர்கள் மீது குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.
தங்கள் ஏழு மாத குழந்தைக்கு காய்ச்சல் தடுப்பூசி செலுத்த குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையின் பெற்றோர் சென்றுள்ளனர்.
எனினும் அங்கிருந்த மருத்துவர்கள் மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை குழந்தைக்கு தவறுதலாக செலுத்தியமை சற்று நேரத்துக்கு பின்னரே தெரிய வந்தது.
இதையடுத்து அந்தக் குழந்தை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாத நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தங்கள் குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.