முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன்
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் காலியில் சமத்துவம் பேசிக் கொண்டு ஒரே மொழி பேசும் இரு சமூகங்கள் வாழ்கின்ற கல்முனையில் இரு இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் சுய அரசியல் இலாபங்களுக்காக செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டதை
வன்மையான கண்டிப்பதுடன், இச்செயற்பாடானது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணப்பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 13 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 2012 இல் இருந்து கடந்த 10 வருடங்களாக இயங்கி வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச பிரிவின் கீழ் உள்ள 29 கிராம சேவகர் பிரிவின் கீழ் உள்ள காணிகள் இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிலையில், வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்குரிய காணிப்பதிவுகள் அனைத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு தற்போது மாற்றப்பட்டு கல்முனை வாழ் தமிழ்மக்களின் உரிமைகளில் கை வைக்கப்பட்டு நியாயமற்ற முறையில் பறிக்கப்பட்ட செயற்பாடு ஒரு பாரதூரமான அநீதியாகும்.
தற்போது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. டொலர் இன்மையால் பொருள் தட்டுப்பாட்டுடன் விலையேற்றமும் இரு மடங்காகியுள்ள இந்நிலையில் அரசுக்கெதிராக நாடு முழுதும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் பல்லின சமூகங்களும் இனமத பேதமின்றி கொழும்பு காலிமுகத்திடலில் தமக்குள்ள மனக்கசப்புக்களையும் இனமுரன்பாடுகளையும் மறந்து எல்லா சமூகத்தவரும் ஒன்றுபட்டு ஒன்றுகூடி அரசுக்கெதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வேளையில் ஒரே மொழி பேசும் இரு சமூகங்கள் வாழ்கின்ற கல்முனையில் இரு இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் சுய அரசியல் இலாபங்களுக்காகத் தமிழர்களை நிர்வாக ரீதியாக அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அரங்கேறி வருகின்றது.
இன நல்லுறவு என்கின்ற பெயரில் மறைமுகமாக கல்முனை மக்களின் உரிமைகளைக் கருவறுக்கும் செயலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அவ்வாறான துரோக செயல்களுக்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணையாக இருப்பது வேதனை தருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பாணமை முதல் பெரிய நீலாவணை வரை தமிழர்களின் இருப்புக்களும் பூர்வீக நிலங்களும் காலத்துக்காலம் சுரண்டப்பட்டு அல்லது பறிக்கப்பட்டே வருகின்றது.
இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அப்பாவி முஸ்லிம் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மட்டுமே ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்கின்ற குறுகிய அரசியலை நோக்காகக் கொண்டு வெளித் தோற்றத்தில் இன ஐக்கியத்தையும் உள் தேற்றத்தில் பகையையும் வளர்த்து வருகின்றனர். இவ் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஒரு முகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னொரு முகத்தையும் காட்டி நல்லுறவை வளர்க்கின்றனர்.
கல்முனையில் தமிழர்கள் மீது முஸ்லிம் அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிகள் காலத்துக்காலம் தெட்டத்தெளிவாக புலப்படுகையில் இணக்க அரசியல் பேசும் தமிழர் தரப்பு நாடாளுமன்றில் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கின்ற போது தமிழர் தரப்புக்கு ஏற்படும் அநீதிகளைக் கண்டும் காணாது கடந்து செல்வது ஏன்?
'பிட்டும் தேங்காய்ப் பூவும் போல' ஒரே மொழி பேசி தமிழர்களின் நிர்வாக
அதிகாரங்களை அடக்கி ஒடுக்கி நசுக்குகின்ற போது இன ஐக்கியம்
விட்டுக்கொடுப்புகள் என பேசி தமது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக இன்னும்
மௌனமாக வேடிக்கை பார்ப்பதென்பது தமிழர் அரசியல் பரப்பில் மாற்றப்பட வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.