தேசிய சபை ஊடாக நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு! நஸீர் அஹமட்
மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற நாடாளுமன்றமாக இருக்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற சபையாக தேசிய சபை இயங்குவதற்கு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
தேசிய சபை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (20.09.2022) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனைவரது கருத்துகளும் உள்வாங்கப்படும்
அவர் மேலும் கூறுகையில், “தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய சபை உருவாக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சகல கட்சிகளிதும் உறுப்பினர்கள் இச்சபையில் உள்வாங்கப்படவுள்ளனர். எனவே, இச்சபையில் சகலரது கருத்துகளும் உள்வாங்கப்படும்.
இதனால், இச்சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்து சகலரும் செயற்பட வேண்டும்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
கடந்த காலங்களில் நடந்த விடயங்களுடன் ஒப்பிட்டு
தற்போது அமையவுள்ள தேசிய சபையில் நம்பிக்கை இழக்க கூடாது.
இந்த உயரிய சபையில் பேசப்படாத விடயங்கள் எதுவுமில்லை. நாட்டில் நடந்த எல்லா விடயங்களும் பேசப்பட்டுள்ளன. ஆனால், இவைகளில் 99 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவில்லை.
இனியாவது, புதிதாக அமைக்கவுள்ள இந்த தேசிய பேரவையால் இந்நிலைமைகளை மாற்ற முயற்சிப்போம்" என தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கை
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இச்சபையினூடாக பெறும் வகையில் செயற்படல் அவசியம்.
அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும்.