நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு.. பெருமளவு நீர் வெளியேற்றம்
நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக பாதுகாப்பு கருதி அதன் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் தொடர் மழையினால் நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தமை காரணமாக வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், அணையின் பாதுகாப்பைக் கருதி, நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதால் குறித்த வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
உரிய நடவடிக்கைகள்..
ஞாயிற்றுக்கிழமை இரவு (02) நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி இரத்து செய்யப்பட்டது.

நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என பொறுப்பான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நுவரெலியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

