இலங்கையில் வாகனங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி - வெளியான காரணம்
இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது சுங்க மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் 15 சதவீத தேய்மானக் கழிவு தொடர்பான விடயம் வெளிச்சத்திற்கு வந்தமையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் விலை சரிவு புதிய வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனங்களின் விலை
300,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை அமைந்துள்ள இந்தத் திடீர் விலை சரிவு குறித்த விவரங்களை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிஹே வெளியிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக யாரிஸ், ரெய்ஸ், வெசல், வேகன் ஆர், டைகட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் உள்ளிட்ட பல பிரபலமான வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தை நிலவரம் காரணமாக, சில விற்பனையாளர்கள் வாகனங்களை நஷ்டத்தில் கூட விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுங்க மதிப்பீட்டு முறை, குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டு முறை குறித்து, சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்த நடைமுறை அரசாங்கத்தின் வரி வருவாயை கணிசமாக பாதிக்கிறது என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
வரி இழப்பு
அதேவேளையில், இந்த மதிப்பீட்டு முறை பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உண்மையான பரிவர்த்தனை மதிப்பைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது என்று இறக்குமதியாளர்கள் வாதிடுகின்றனர்.

இதற்கிடையில், 2019ஆம் ஆண்டில் 2,000cc திறன் கொண்ட 13 Audi A5 வாகனங்கள் 1,400cc திறன் கொண்டவையாக அறிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி இழப்பு 160 மில்லியன் ரூபாய் என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.
வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சில பிரபலமான மாடல்களின் விலைகள் 500,000 ரூபாய் முதல் 900,000 ரூபாய் வரை உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.