உள்நாட்டு யுத்தத்தை நிறுத்த பசில் வழங்கிய ஆதரவு! சாகர வெளியிட்ட தகவல்
எதிர்காலத்தில் இலங்கையை வழிநடத்த மிகவும் பொருத்தமான நபர்களில் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(11.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போர்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பசில் ராஜபக்ச ஏற்கனவே தனது திறமையை நாட்டுக்கு வெளிப்படுத்தி நிரூபித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு போரை முடிவிற்கு கொண்டு வருவதில் ஒரு முக்கிய பாத்திரத்தை பசில் வகித்தார்.
மேலும் போரின் போது வெளிநாட்டு நாடுகளின் உதவியைப் பெறக்கூடிய ஒரு தலைவராகவும் அவர் இருந்தார்.
பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குள் இலங்கையை கொண்டு வருவதில் பசில் முக்கிய பங்காற்றியதுடன் நாட்டின் வெற்றிகரமான நிதியமைச்சரும் ஆவார்.
வடக்கு,கிழக்கில் அபிவிருத்தி
இதேவேளை பசில் ராஜபக்ச யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து வடக்கு,கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுத்த தலைவர் ஆவார்.
அவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும், தற்போது பசில் ராஜபக்ச அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனவே பசில் ராஜபக்சவே இலங்கைக்கு மிகவும் பொருத்தமான தலைவர்.” என வலியுறுத்தியுள்ளார்.
