மெட்டுக்கட்சியின் பிரதமர் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்:பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் ஒருவர் தலைமையில் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர்கள் இதனை ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
எதிர்காலத்தில் சிறந்த விடயம் ஒன்று நடக்கும்
69 லட்சம் மக்கள் ஆணை வழங்கியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் பிரதமர் ஒருவர் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி எதிர்காலத்தில் சிறந்த விடயம் ஒன்று நடக்கும் எனவும் ஏற்கனவே இருந்த விதத்தில் அரசாங்கம் ஒன்றை அமைப்பது எப்படி என்பதை தேடி அறிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
போராட்டத்தை ஆரம்பித்த மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலையேற்றங்கள், எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர்.
அத்துடன் அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
பதவி விலகிய ராஜபக்சவினர்
போராட்டங்கள் அதிகரித்ததை அடுத்து ராஜபக்சவினர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகினர். இதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவ்வாறான அரசியல் சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பிரதமராக நியமித்து அவர் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தார்.